கர்நாடகத்தின் பிடிவாதம் தளருமா? |
காவிரியில் தமிழக அரசுக்கு உரிய பங்கு நீரைத் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"காவேரி நதிநீர்ப் பிரச்சனை தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப் பணித் துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிக்கும் வகையிலும், தமிழகத்திற்கு விடுவித்துக் கொண்டிருந்த தண்ணீரை தன்னிச்சையாக நிறுத்தி, தமிழகத்திற்கு உரிய பங்கினை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து, தமிழகத்திற்கு உரிய பங்கினை உடனடியாக பெற முதலமைச்சர் உத்தரவிட்டார். முதலமைச்சரின் உத்தரவினையடுத்து, கர்நாடக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உடன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" என கூறப்பட்டுள்ளது.
Post a Comment