கொல்லப்பட்டவர்களின் சடலங்கள்
தமிழகத் தலைநகர் சென்னையில் அண்மையில் நடந்த இரு வங்கிக்கொள்ளைகளில் சம்பந்தப்பட்டதாக காவல்துறையால் சந்தேககிக்கப்படும் ஐந்து பேர் நேற்று அதிகாலை காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய புலனாய்வு செய்யும்படி, தமிழ்நாட்டின் காவல்துறைத்தலைவர் மற்றும் சென்னை மாவட்ட மாஜிஸ்ட்ரேட் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாக்கீது அனுப்பியிருக்கிறது.
இது தொடர்பான ஊடகச் செய்திகளின் அடிப்படையிலும், மனித உரிமைகள் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையி்லும் இந்த தாக்கீதுகளை ஆணையம் தமிழக காவல்துறைக்கு அனுப்பியிருக்கிறது.
தமிழ்நாட்டின் காவல்துறைத்தலைவர், சென்னை மாவட்ட மாஜிஸ்ட்ரேட் ஆகியோருடன், சென்னை மாவட்ட கண்காணிப்பாளருக்கும் மனித உரிமைகள் ஆணையம் தாக்கீது அனுப்பியிருக்கிறது.
இந்த தாக்கீதுகளுக்கு, எட்டுவாரகாலத்திற்குள் உரிய பதில்களை அனுப்பும்படி மனித உரிமைகள் ஆணையம் கோரியிருப்பதாக ஆணையத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
அவர்களின் பதில்களுடன், இது தொடர்பான விசாரணை செய்துவரும் மாஜிஸ்ட்ரேட்டின் விசாரணை அறிக்கை, இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கைகள், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டு விதிகளின்படி இந்த சம்பவம் தொடர்பான சுயாதீன விசாரணை அறிக்கை ஆகியவற்றையும் சமர்ப்பிக்கவேண்டும் என்று கோரப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
பிகார்
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் பிகார் மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் என்பதால், இந்த பிரச்சினை பிகார் சட்டமன்றத்தில் எதிரொலித்ததாகவும், இந்த சமபவத்தில் உரிய விசாரணை நடத்தும்படி தமிழக அரசிடம் கோரியிருப் பதாக, பிகார் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சமபவம் தொடர்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் சார்பில் வழக்கு ஒன்றும் தொடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த காலங்களில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட என்கவுண்டர் கொலைகள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று வழக்கு தொடுத்திருக்கும் மக்கள் கண்காணிப்பகம் என்கிற அமைப்பின் தமிழ்நாடு பிரிவு இயக்குநர் வழக்கறிஞர் ராஜன் அவர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இந்த முன்னெடுப்பு வர்வேற்கத்தக்கது என்கிறார். அவரது செவ்வியின் ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

Post a Comment