செய்திகள்

அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்ட தினமலர் கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதி மீது மேலும் வழக்குகள்




சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த வக்கீல் எ.இந்திராணி எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஜனவரி 29ம் தேதி வெளிவந்துள்ள தினமலர் நாளிதழிலும், தினமலர் இணையதளத்திலும் ‘வாழ்வாதாரத்தை உயர்த்த இப்படியும் ஐடியா, கவுண்டரர்களாக மாறிவரும் வன்னி யர்கள் என்ற தலைப்பில் செய்தி வெளிவந்துள்ளது. அந்த செய்தியில், “வாழ்வாதாரத்தை உயர்த்திய பின்னும் கவுண்டர் என்ற பெயரில் சமூகத்தில் வன்னியர்கள் வலம் வருகின்றனர். இவர்கள் அரசியல் ரீதியாக தங்களை வன்னியர் எனக் காட்டிக்கொண்டாலும் சமூக ரீதியாக கவுண்டர் என காட்டிக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

தமிழகத்தில் வட மாவட்டங்களில் வன்னியர்களுக்கு என ஓட்டு வங்கி உள்ளது. வன்னியர்கள், பிற சமூகத்தினர் மத்தியில் பழகுவதை தவிர்த்து, குறிப்பிட்ட இடைவெளியை ஏற்படுத்திக் கொள்வர். தமிழகத்தின் மூவேந்தர்களின் ஆட்சிக்குப்பின் கவுண்டர்களை நாட்டுக் கவுண்டர்கள் எனவும் வன்னியர்களை வன்னியக் கவுண்டர்கள் எனவும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின் காலமாற்றத்தின் காரணமாக பெருந்தாளிக் கவுண்டர், சிறுதாளிக் கவுண்டர் என கிராமங்களில் நடைமுறைக்கேற்ப அழைக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமக்கல், நாமகிரிப்பேட்டை பகுதியில் வாழும் கவுண்டர்கள் மட்டுமே இன்றளவும் நாட்டுக் கவுண்டர் என அழைக்கப்படுகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் சங்ககிரி துவங்கி கோவை மாவட்டம் வரை அதிக அளவில் கொங்கு வேளாளக் கவுண்டர்களே உள்ளனர். வன்னியர்களைப் பொறுத்தவரை படையாச்சி, கவுண்டர், வர்மா, நாயக்கர் உள்பட 102 வகையினர் உள்ளனர். இவர்களைப் பொதுவாக வன்னியர் குல சத்திரியர் என்று அழைப்பர்.

அரசால் வழங்கப்படும் சான்றிதழ்களில், ஜாதிச் சான்றிதழ்களில் வன்னியர்குல சத்திரியர் என்று வன்னியர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் வறுமை காரணமாக சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட காலமும் உண்டு. தற்போது நாகரீக வளர்ச்சியின் காரணமாக சமூகத்தில் தங்களை மேம்படுத்திக்கொண்டு வருகின்றனர். பலர் அரசியல் மூலம் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் மேம்படுத்திக் கொண்டனர்.

இன்று, அரசுப் பதவிகளிலும் சரி, வர்த்தக, தொழில் ரீதியாகவும் அரசியலிலும் வலம் வருகின்றனர். சமூகத்தில் தங்களை மேம்படுத்தப்பட்டவர்களாக உயர்த்திக்கொண்டா லும் இன்றளவும் அவர்கள் வம்புக்கும் (சண்டைக்கும்) அடாவடிக் கும் (அடக்குமுறைக்கும்) பெயர்போனவர்கள் என்ற எண்ணம் பிற சமூகத்தினரிடம் உள்ளது. அதன் காரணமாக வன்னியர்கள் என்றால் அவர்களிடம் வரவு செலவு, கொடுக்கல் வாங்கல் கூடாது என்பதை எழுதப்படாத விதியாக பிற சமூகத்தினர் கடைபிடிக்கின்றனர்.

சமூகத்தில் மேம்பட்ட நிலைக்கு வந்த வன்னியர்கள் பலர் தொழில்ரீதியான பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் தங்களைக் கவுண்டர் என சமூகத்தில் அறிமுகம் செய்துகொண்டு வலம் வருகின்றனர். இந்த கலாச்சாரம் கடந்த 5 ஆண்டுகளாக வேகமாக பரவி வருகிறதுÕ என்று செய்தியில் கூறப்பட்டுள்ளது.  இந்த செய்தி வன்னியர் சமூக மக்கள் சமூகத்தில் தவறான இனத்தவர் என்ற பொய்யான எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவளான நான் இந்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சி
அடைந்தேன்.

உண்மைக்குப் புறம்பான இந்த செய்தியால் தமிழகத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன் அனைத்து சமூகத்தினரிடம் பிரிவினையையும் ஏற்படுத்திவிடும். எந்தவித ஆதாரமும் இல்லாமல் இந்த அவதூறு பரப்பும் செய்தியால் வன்னியர் சமூக மக்களுக்கு மற்ற சமூகத்தினரிடம் இருக்கும் மதிப்பை குறைந்துவிடும்.  சம்பந்தப்பட்ட சமூகத்தினர் எவரிடமும் எந்த வித விளக்கமும் கேட்காமல் இதுபோன்ற பொய்யான, உண்மைக்கு முரணான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த அவதூறு பரப்பும் செய்தியை வெளியிட்ட தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் மற்றும் பதிப்பாளர் ஆர்.லட்சுமிபதி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 (எ) (இனக் கலவரத்தை தூண்டும் வகையில் செய்தி வெளியிடல்), 500, 501, 502, 503 (அவதூறு செய்தி வெளியிடல்), 504 (அவமானப்படுத்தும் வகையில் செய்தி வெளியிடல்), 505 (அவதூறு பரப்புதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவும், நேற்று முன்தினம் வக்கீல் குமார் தினமலர் மீது தொடர்ந்த வழக்கும், தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கிள்ளிவளவன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட், மனுதாரர்கள் குமார் மற்றும் இந்திராணி ஆகியோர் 9ம் தேதி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தர்மபுரி, புதுவையிலும் வழக்கு

தர்மபுரி வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மாது உட்பட 6 பேர், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1லும், வெங்கடேசன் உட்பட 4 பேர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2லும் தினமலர் கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதி மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
அதில், உண்மைக்கு புறம்பான செய்தியால் தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டு பிரிவினையை உருவாக்கும் வகையில் அவதூறு செய்தி வெளியிட்ட தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் மற்றும் பதிப்பாளர் லட்சுமிபதி ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்ந்துள்ள வழக்கறிஞர் பாரிமோகன் கூறுகையில், வருமானத்திற்காக இதுபோன்ற மட்டரக செய்திகளை வெளியிட்டுள்ள தினமலரால் தமிழகத்தில் சாதி மோதல் ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார். அதேபோல, புதுவை மாநில பாமக செயலாளர் அனந்தராமன், வன்னியர் சங்க செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் புதுச்சேரி 1வது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்
Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...