சென்னையை சேர்ந்த வக்கீல் விஜயலட்சுமி சண்முகம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-
பயங்கரவாத செயலை தடுப்பதற்காக தேசிய தீவிரவாத தடுப்பு மையம் திறக்க போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த மையத்தின் செயல்பாடுகள், பணிகள் நீதிதுறைக்கு பதில் சொல்ல தேவையில்லாத உளவு அமைப்புகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் திறப்பது குறித்து மாநில அரசுகளுடனோ, பாதுகாப்புதுறை அமைப்புகளிடமோ மத்திய அரசு கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. அது மாநில உரிமைகளுக்கு எதிரானது. தமிழக முதல்-அமைச்சர் உள்பட பல்வேறு மாநில முதல்வர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனவே, தீவிரவாத தடுப்பு மையம் திறக்க தடைவிதிக்க வேண்டும். அது தொடர்பான மத்திய அரசு ஆணைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி அருள் ஜெகதீசன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல் மணிகண்டன் ஆஜராகிவாதிட்டார். அப்போது தலைமை நீதிபதி, மனுதாரர் தரப்பு வக்கீலை நோக்கி சரமாரியாக கேள்வி கேட்டார். அதன் விவரம் வருமாறு:-
மாநிலத்திற்கு எதிரான மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து தனிநபர் எப்படி பொதுநல வழக்கின் அடிப்படையில் தாக்கல் செய்ய முடியும். இந்த மனுவில் பொது நலன் எங்குள்ளது? தமிழக முதல்-அமைச்சரின் தனி பிரிவுக்கு அனுப்பப்பட்ட மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஆணை தொடர்பான ஆவணங்கள் மனுதாரருக்கு எப்படி கிடைத்தது? மத்திய- மாநில அரசுகளுக்கு இடையேயான இந்த பிரச்சினையில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது. உச்சநீதிமன்றம் மட்டுமே தலையிடமுடியும்.
மனுதாரர் வக்கீலை பற்றி எனக்கு 1 1/2 ஆண்டுகளாக தெரியும். இந்த வழக்கில் நாங்கள் உத்தரவு பிறப்பிக்காவிட்டால் எங்களின் மீதே ஏதேனும் குற்றச்சாட்டுகளை சுமத்தி உச்சநீதிமன்றத்துக்கு கடிதம் எழுதிவிடுவார். ஆகவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.
Post a Comment