செய்திகள்

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம்: அன்புமணி ராமதாஸ் பேச்சு


பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம்: அன்புமணி ராமதாஸ் பேச்சு

சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தமிழக மாணவர் சங்கம் சார்பில் மாணவ- மாணவிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

மாணவர்கள் எதை நினைத்தாலும் சாதிக்கலாம். கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி ஒருவர் இருந்தால் அவரிடம் நான் வரம் கேட்டால் பெரிய பணக்காரராக வேண்டும் எனவோ, பிரதமராக வேண்டும் எனவோ கேட்க மாட்டேன். எனது கல்லூரி பருவத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என கேட்பேன்.

வருங்கால இந்தியர்கள் நீங்கள். இந்த இளைஞர்களை வழிநடத்தி செல்லும் வித்தியாசமான தலைவர் மருத்துவர் ராமதாஸ் ஒருவர்தான். இம்மண் சாதாரன மண் கிடையாது. 1967ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்த அண்ணாமலைப் பல்கலை. மண். இந்தி எதிர்ப்பு மொழிப்போர் போராட்டம் இம்மண்ணில் தொடங்கி மாணவர்கள் போராடிய மண். இதன் மூலம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இதே மண்ணில் நாம் ஒன்று கூடியுள்ளோம். ஒற்றுமையுடன் போராடுவோம்.

அடுத்து நிச்சயம் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும். ஆட்சிக்கு வரவைப்போம். திராவிடக் கட்சிகள் மாறி, மாறி 45 ஆண்டுகள் ஆண்டு குடிகார நாடாகவும், பிச்சைக்காரர்கள் நாடாகவும், இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறிகளாகவும் ஆக்கிவிட்டது. பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் தராது. கல்வி, சுகாதாரம், வேளாண் இடுபொருள்களை இலவசமாக கொடுப்போம். இதுதான் மற்றவர்களுக்கும், நமக்கும் வித்தியாசம். அரசியல் வேண்டாம் என மாணவர்கள் சொல்ல முடியாது. அவசியம் அரசியலுக்கு வந்தாக வேண்டும்.

ஏனென்றால் எதிர்காலத்தை உருவாக்கும் இளைஞர்கள் நீங்கள்தான். உலக நாடுகளில் புரட்சிகள் நடைபெற்று வருபதற்கு இளைஞர்கள்தான் காரணம். அதே போன்ற புரட்சி தமிழகத்தில் ஏற்பட வேண்டும். சினிமா ஒரு பொழுது போக்கு. அதனை பார்த்துவிட்ட மறந்துவிட வேண்டும். ஆனால் நம் மக்கள் அதனை உண்மை என்று நம்பி ஏமாந்து போகின்றனர். இந்தியாவில் தமிழ் நாட்டை தவிர, எந்த மாநிலத் திலும் சினிமாக்காரகள் ஆண்டதில்லை. 45 ஆண்டு களாக சினமாவில் வேஷம் போட்டவர்களும், வசனம் எழுதியவர்களும்தான் ஆண்டு வருகின்றனர்.

தற்போது தமிழகத்திற்கு ஒரு நடிகை முதல்வர், ஒரு நடிகர் எதிர்க்கட்சி தலைவர். அண்ணாதுரை எம்.ஏ. படித்தவர். அவருக்கு பிறகு இவர்கள் யாரும் படித்தவர்கள் கிடையாது. இனி தமிழ்நாட்டை படித்தவர்கள் ஆள வேண்டும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வேளாண்மை குறித்து புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற செயல்திட்டத்தை பா.ம.க. புத்தகமாக வெளியிட்டுள்ளது. பா.ம.க. ஒரு வித்தியாசமான கட்சி. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமைதி புரட்சி ஏற்பட்டது. இளைஞர்கள் அந்த புரட்சியை ஏற்படுத்தினர். அ.தி.மு.க.விற்கு ஒட்டுப்போடவில்லை. தி.மு.க.விற்கு எதிராக ஓட்டு போட்டார்கள். ஓட்டு போட வேறு யாரும் இல்லை. தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம். உறுதியாக தெரிவிக்கிறோம். பா.ம.க. தலைமையில் தனி அணி அமைப்போம். திராவிட கட்சிகள் திராவிடன் என்ற வார்த்தையை வைத்து ஏமாற்றி வருகிறார்கள்.

திராவிடர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக உள்ளனர். ஆனால் அங்கு திராவிட கட்சிகள் கிடையாது. தமிழகத்தில் திராவிட கட்சிகள் உள்ளது. கேரளாவில் நாயர்மேனன் தவிர வேறு யாரும் ஆள முடியவில்லை. ஆந்திராவில் ரெட்டி, நாயுடு தவிர வேறு யாரும் ஆளவில்லை. திராவிட கட்சிகள் தலைவர்கள் கருணாநிதி, எம்ஜிஆர்., ஜானகி, ஜெயலலிதா. வைகோ யாரும் தமிழன் கிடையாது. தமிழன் யார் என்றால் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஒருவர்தான்.

பாமக ஆட்சிக்கு வந்தால் சினிமா கலாச்சாரம், மது ஆகியவற்றை ஒழிப்போம். திமுக ஆட்சியில் 85 ஆயிரம் கோடி இலவசமாக வழங்கப் பட்டுள்ளது. இதில் 20 ஆயிரம் கோடி மின்திட்டத்திற்கு ஒதுக்கியிருந்தால் மின்வெட்டு வந்திருக்காது. மின் கட்டணம் உயர்ந்திருக்காது. 20 ஆயிரம் கோடி போக்குவரத்து துறைக்கு ஒதுக்கியிருந்து பஸ் கட்டணம் உயர்ந்திருக்காது.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட தமிழக மாணவர் சங்க செயலாளர் கோபிநாத் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் முருகன் வரவேற்றார். பாமக மாநிலத் தலைவர் மணி மாநில இளைஞரணி செயலாளர் அறிவுச்செல்வன், தமிழக மாணவர் சங்க தலைவர் பாரிமோகன், துணைப் பொதுச்செயலாளர் திருஞானம், பா.ம.க. மாவட்டச் செயலாளர் வேணு. புவனேஸ்வரன், சமூக முன்னேற்ற சங்கம் பொதுச்செயலாளர் சிவப்பிரகாசம் பேராசிரியர் செல்வகுமார், பேராசிரியர் மணிவண்ணன் உள்ளிட் டோர் பங்கேற்று பேசினர். கூட்டத்தில் அண்ணா மலைப் பல்கலைக்கழகம், கடலூர் மற்றும் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம் மருத்துவர் ராமதாஸ் அறிவியல் கலைக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லரிகளைச் சேர்ந்த தமிழக மாணவர் சங்க நிர்வாகிகளும் பங்கேற்று பேசினர். தமிழக மாணவர் சங்க (தெற்கு) மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...